துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனை நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, நடுவானில் திடீரெனப் புகை வெளியேறியதால் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் விமானிகள் உட்பட மொத்தம் 142 பேர் பயணித்தனர்.
நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்து புகை வெளியேறியதால், அதில் பயணித்த 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
விமானம் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியதும், அங்குத் தயாராக இருந்த மீட்புக்குழுவினர் உடனடியாகப் பயணிகளைப் பத்திரமாக வெளியேற்றினர்.
பின்னர், மூச்சுத்திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
விமானம் ஏன் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது மற்றும் புகை வெளியேறியதற்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
