ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்களை நான்கு விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
இவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அக்டோபர் 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்கள், மீனவர்களை நம்பியே வாழ்ந்து வந்த நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான கார்த்திக் என்பவரின் மனைவி, தற்போது நிறைமாதக் கர்ப்பிணியாக உள்ளார். பிரசவ நேரத்தில் தனது கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று அவர் கண்ணீருடன் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைச் சிறையில் உள்ள 30 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாகக் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
