டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் புதிதாக வாங்கப்பட்ட மஹிந்திரா தார் கார் ஒன்று, முதல் மாடியின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை நிகழ்ந்துள்ளது.
காரின் உரிமையாளரான மாணி பவார் என்பவர், புதிய வாகனத்திற்கு பூஜை செய்வதற்காக தனது கணவர் மற்றும் ஒரு ஷோரூம் ஊழியருடன் காரின் உள்ளே இருந்துள்ளார்.
பாரம்பரிய வழக்கப்படி, காரின் சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்களை வைத்து, அதனை மிதித்து எடுக்க முயன்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.
அப்போது, எதிர்பாராத விதமாக காரின் உரிமையாளர் ஆக்சிலேட்டரை அழுத்தியதால், கார் வேகமாகச் சென்று கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்துள்ளது.
சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கார் தலைகீழாக சாலையில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த மூவருக்கும் அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
உடனடியாக செயல்பட்ட ஷோரூம் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
இந்த விபத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதைப் பார்த்த பலர் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
