உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹாபூர் பகுதியில் இருக்கும் போதை மறுவாழ்வு மையம் ஒன்றில், சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வாலிபர் ஒருவர், பசியின் காரணமாக ஸ்பூன் மற்றும் டூத்பிரஷ் போன்ற பொருட்களைச் சாப்பிட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சச்சின் (35) என்ற அந்த வாலிபரை அவரது உறவினர்கள் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்தனர். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, மையத்தில் மிகக் குறைந்த அளவிலேயே உணவு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒருநாள் முழுவதும் ஒரு சில சப்பாத்திகள், குறைந்த அளவு காய்கறிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளனர். மேலும், உறவினர்கள் கொண்டு வரும் உணவையும் சச்சினுக்குக் காட்டாமல் மறைத்துள்ளனர். சில சமயங்களில் ஒரு பிஸ்கட் மட்டுமே அவருக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கடும் பசி மற்றும் ஆத்திரத்தில் இருந்த சச்சின், ஒரு கட்டத்தில் ஸ்பூன், டூத்பிரஷ், பேனா போன்ற பொருட்களைக் கழிவறைக்கு எடுத்துச் சென்று, அவற்றை இரண்டு மூன்று துண்டுகளாக உடைத்துச் சாப்பிட்டுள்ளார். சில நேரங்களில் உள்ளே செல்லவில்லை என்றால் தண்ணீர் குடித்து விழுங்கியுள்ளார்.
இதனால், கடுமையான வயிற்று வலியால் துடித்த சச்சினை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றுக்குள் ஸ்டீல் ஸ்பூன், டூத்பிரஷ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்த மறுவாழ்வு மையத்தின் உணவு மற்றும் பராமரிப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
