உலக பாரிசவாத (Stroke) தினத்தை முன்னிட்டு, சுகாதாரத் தரப்பினர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல், 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பாரிசவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.
களுத்துறை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் சுரங்கி சோமரத்ன இது குறித்துப் பேசுகையில், பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இது இளம் வயதினரிடையே நோய் தாக்கம் அதிகரிப்பதைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29 ஆம் திகதி உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற வைத்தியர் சுரங்கி சோமரத்ன, இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் வலியுறுத்தினார்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது பாரிசவாத நோயைத் தடுக்க மிக அவசியம். நடைபயிற்சி, உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளை விளையாடுதல், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய பயிற்சிகள் கூட சிறந்தவை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
