நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் வீட்டிற்குள் நேற்று மாலை அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அமர்ந்திருந்த அந்த வாலிபரை, பாதுகாப்புப் பணியில் இருந்த வீட்டு காவலாளிகள் பிடித்து நீலாங்கரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் மதுராந்தகத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அருண் என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வேளச்சேரியில் தனது சித்தி வீட்டில் வசித்துவந்ததும் தெரியவந்தது.
விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் வீட்டிற்குள் நுழைந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் எவ்வாறு வீட்டிற்குள் நுழைந்து மொட்டை மாடிக்குச் சென்றார் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அருண், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
